Showing posts with label தீமைகள். Show all posts
Showing posts with label தீமைகள். Show all posts

Monday, 19 March 2012

திசை மாறும் தூண்கள்..!

நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் இளமை பருவம்..!  ஆண் ,பெண் என இரு தரப்பினருக்குமே எவ்வளவு ஒரு அழகான ,ஆக்கபூர்வமானபருவம்..! ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றலும் அறிவும்,துணிவும்,துடிப்பும் அவர்களின் எழுச்சியும்மிக பெரும் சக்தி என்றால் அது மிகையில்லை..! ஒரு சமுதாயத்தில் எந்த ஒரு சமூக மாற்றமும் இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் நடை பெற்றதில்லை..! தன் வயதின் முழுசக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தும் பருவம் இளமை பருவம் ..!


ஆனால் தன் சக்தியை ,தன் தேவையை ,தன் பொறுப்பை ,சரியாக இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்றால் பெருமளவு இல்லை என தான் தோன்றுகிறது...! இப்போது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம்இளைஞர்களாக தான் இருக்கிறார்கள்...! தன் தவறான நடவடிக்கையின் காரணத்தால் குற்றங்களை செய்து விட்டு தன் வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியை சிறை வாழ்க்கையில் கழிக்க வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறார்கள்...!


நாம் அனைவருமேசமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது..! தான் கற்பிக்கும்பள்ளியில் தன் மாணவனால் ஒரு ஆசிரியை பள்ளி வளாகத்தில் கொல்லப் பட்டதும்,ஒரு பெண் நம்பிக்கையோடுநண்பனாக பழகியவர்களாலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஆன இரு நிகழ்வுகள் தான் அவை...! சமூகத்தில் மீது அக்கறையும்,பொறுப்பும் கொண்டஒவ்வொருவரையும் அதிர்ச்சியும்,கவலையும் கொள்ள வைத்த சம்பவங்கள் இவைஎன்றே சொல்லலாம்.


இவை மட்டும் அல்லாதுபள்ளிப் பருவ காதல்,பள்ளிப் பருவ கர்ப்பம்,பள்ளிப் பருவ குடிப்பழக்கம்,வகுப்பிலேயே சக தோழியை மோசமாக படம் எடுத்து அனைவருக்கும் அனுப்பி வைப்பது,தன் ஆசிரியையை படம் எடுத்து இணையத்தில் தவறான முறையில் பதிவு செய்வது ,பெற்ற மகனே தன் சொந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆள் அனுப்பி திருட வைத்தது, தங்கையாக நினைக்கக் கூடிய நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடுவது என்று இப்படிஇன்னும் நிறைய விசயங்கள்.

ஆரம்பத்தில்..! இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா..! நடக்குதா..? என  கேட்ட செய்திகள் எல்லாம் இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது..! நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன ..? என்றுமனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்...! நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது..! தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம்..! அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும்,நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது...!   


முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போதுதன்கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது...! அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது..! சரி,இது போல நடக்க என்ன காரணம்..? யார் காரணம்..?  என பார்த்தால்குற்றம் சுமக்க வேண்டியவர்களில்முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்..! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்..! தந்தை என்பவர்பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்

இப்போது அநேக வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான்..! இரண்டு என்பது கூட இப்போது குறைந்து ஒன்று என்பது தான் அதிகளவில் இருக்கிறது..! காரணம் வேலைக்குப் போவதால் கவனிக்க ஆள் இல்லை என்பது..! பிள்ளையை யார் பார்த்துக் கொள்வது..? வீட்டில் சரியான வழிகாட்டுதலோடுபெரியவர்கள் இருந்தால் சரி, இல்லை என்றால் என்ன செய்வது..? வேறு வழி அதற்கென்றே இருக்கும் ஹோம்களே கதி..! சிறு வயதில் இருந்தே தாய் ,தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போது ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்தஉலகத்தில் உலா வரத்தொடங்குகிறது...!அதில் இப்போது தாய்க்கும்,தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை...! இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்..!


பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை இப்போது அதிகளவு காணப்படுகிறது.,,! உலகத்திலேயே தன் மகன் தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்..! அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை எல்லா இடத்திலும் வாரி இறைக்கும் பெற்றோர் அதிகம்..! நல்ல வசதியையும்,நல்ல படிப்பையும் கொடுக்க நினைக்கும் பெற்றோர் மறந்தது தன் மகனை சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக வளர்க்க வேண்டும் என்பதை..!


பிள்ளைகள் கேட்கும் எல்லா நவீன பொருள்களையும் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அவர்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்துகிறார்களா என கவனிக்காமல் விடுவது தான் அவர்கள் செய்யும் தவறு.! ..பருவ வயதில் அது ஆணாகட்டும்,அல்லது பெண்ணாகட்டும் இருவருக்கும் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தான சரியான வழிகாட்டுதல் தேவை..! கண்டிப்பா இப்போது தான் அவர்களின் மீது கூடுதல் அக்கறையும் கவனமும் தேவை...!



ஆனால் பெற்றோருக்கு அவர்களோடு மனம் விட்டு பேச நேரம் இருப்பதில்லை..!பெரும்பாலான பெற்றோருக்கு நம் பிள்ளையின் நண்பர்கள் யார் எனத் தெரியாது..! அவர்கள் எப்படிப் பட்ட நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது..! பிள்ளைகளும் இப்போது பெற்றோரை எதிர்பார்பதில்லை..!அவர்களுக்கு இப்போது தேவை பணமும் அவர்கள் விரும்பும் நண்பர்களும் தான்..! இந்த மாதிரி வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் பெற்றோர்கள் என்பவர்கள் தன் தேவைக்காக பணம் கொடுப்பவர்கள் மட்டும் தான்..!


குற்றங்களின் காரண கர்த்தாவில் இப்போது இணையமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை...! இணையத்தில் அதற்கென்று தனியாகத் தேடித் போக வேண்டாம் நாம் வேறு ஒன்றைத் தேடி எழுத்தை தட்டினாலே வன்முறை குறித்தான விசயங்களும் ஆபாச படங்களும்,ஆபாச பதிவுகளும் வந்து கொட்டுகிறது..! இதில் தனிமை என்பது நல்ல தெளிவாய் இருக்கும் மனிதர்களையே சற்று நிலை தடுமாறச் செய்யும் விஷயம்...! இதில் எளிதில் உணர்ச்சி வசப்படும் டீன் ஏஜ்ஜில் இருக்கும் பிள்ளைகள் தனிமையில் இதைப் பார்த்தால் என்ன ஆகும்...?


இயல்பாகவே எதிர்பாலினர் குறித்தான தேடுதலும், சிந்தனையும்,அதிகம் இருக்கும்பருவம்இது...!சரியானவழிகாட்டுதலோடும்,தன்னம்பிக்கையோடும் வளர்க்கப் படும் பிள்ளைகளுக்கு இது ஒரு பொருட்டாக இருப்பதில்லை..! அவர்களுக்குத் தெரியும் நம் இலக்கு எது என்றும்..!  எதை நோக்கி நாம் போக வேண்டும் என்பதும்..! இந்த மாதிரி விசயங்களில் மாட்டிக் கொண்டால் நம் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால், அவர்கள் தன் நட்பு வட்டத்தையும் கவனமாக தேர்தெடுத்துக் கொள்கிறார்கள்..! பொதுவாக நட்பு வட்டம் என்பது எப்போதும் நமது சரி தவறுகளை திருத்தி அதை உரிமையாக எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும்...! தெளிவான மன நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு இயல்பாக தன் வயதிர்க்குண்டான  மனத்தடுமாற்றங்களை மிக எளிதாக கடந்து விட முடிகிறது ..!


ஆனால் சிறு வயதில் இருந்தே சரியான வழிகாட்டுதலோடு வளராத  பிள்ளைகளின் மனம் அதை நோக்கியே போகும்..! தப்பைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் தனிமையில் தன் இஷ்டத்திற்கு வளரும் பிள்ளைகளுக்கு, தப்பான விசயங்களை ஆரம்பத்தில் பார்க்கும் போது இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியும் ஒரு கட்டத்தில் போய் விடுகிறது...! எது சரி எது தவறு என்பதைத் தாண்டி தன் ஆசைகளையும் தேவைகளையும் எவ் விதத்திலும் நிறைவேற்ற கொள்ள துணிந்து விடுகிறார்கள் என்பதே உண்மை...! இது தான் மன வக்கிரத்தின் வெளி தெரியாத உச்சக்கட்டம்...! இவை தான் இந்த மாதிரி குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம்..!


சரி வேலைக்கு எல்லாருமா போறாங்க வீட்டில் அம்மா இருக்கும் பிள்ளைகளும் தானே தப்பு பண்ணுது என்று கேட்டால்...? உண்மை தான்.மறுக்க முடியாது...! ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்தப் பிள்ளை அதிக செல்லத்தால் தன் அறியாமை அம்மாவால் தன் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கிறது..! தன் தந்தையின் அருகாமை இல்லாமல் இருக்கிறது.


இதற்கான தீர்வாக சிறு வயதில் இருந்தேஅவர்களுக்கு ஊட்டப்படும் அழுத்தமான இறைநம்பிக்கை தான் சரியான ஒன்றாக இருக்கும்..! சிறு வயதாக இருக்கும் போதே அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விசயங்களை கதை சொல்வது போல சொல்லி,நன்மை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும் ,அடுத்தவர்களுக்கு தீமை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், இந்த உலகத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் நடக்க வேண்டியதன்  அவசியத்தையும் தெளிவாக புகட்டி விட வேண்டும்...!


சக மனிதர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகம்,மோசடி,பொய் பித்தலாட்டம்,ஏமாற்றுதல் போன் இன்ன பிற தவறான செயல்களை இறைவன் விரும்புவதில்லை என்பதையும் அவன் அது குறித்து கடுமையாக கோவப்படுவான் என்பதும் அவர்களின் மனதில் அழுத்தம் திருத்தமாக சிறு வயதில் இருந்தே பதிவு செய்ய பட வேண்டும்...!


நாம் அனைவருமே பொறுப்பாளிகள் ஆவோம்..! நாம் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவோம்..! அதற்கு சரியான காரணம் சொல்லப்பட வேண்டும்...! அதில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது...! சரியான முறையில் வளர்க்க படாத பிள்ளைகள் நாளை நமக்கு மிக பெரிய துன்பத்தை தர தயாராக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28) 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...