ஏக இறைவனின் கருணையோடு..!
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
4)அல் மலிகு :
அகிலங்கள் அனைத்தின் உண்மையான மன்னன் .ஈருலகின் அதிகாரமும் அவன் கைவசமே உள்ளது .
''மிக உயர்ந்தவனாவான் ;உண்மையான அரசனாகிய அல்லாஹ்!''(23:116)
5)அல் குத்தூஸ்:
எல்லாவித குறைபாடுகளையும் தவறுகளையும் விட்டும் தூய்மையானவன். எனவே,அவன் வழங்கிய சட்டம் தான் அனைத்து வித குறைபாடுகளிலிருந்தும் பாதுகாப்பானது!
6)அஸ்ஸலாம்:
குறைகள்,பலவீனங்கள் அனைத்தையும் விட்டு பாதுகாப்பானவன்!
7)அல்முஃமின்:
அனைத்து வித துன்பங்கள்,வேதனைகளை விட்டும் மனிதர்களைக் காத்து இரட்சிக்கக் கூடியவன்.
8)அல் முஹைமின்:
படைப்பினங்களைக் கண்காணிப்பவன்:பாவங்களிலிருந்து காப்பாற்றுபவன்.
9)அல் அஜீஸ்:
கண்ணியமிக்கவன்:அனைவரையும் தன் ஆதிக்கத்தில் கட்டுப் படுத்தி வைப்பவன்.
''கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கின்றது ''(10:65)
10)அல் ஜப்பார்:
அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன்;படைப்பினங்களை அடக்கி ஆள்பவன்!
11)அல் முதகப்பிர்:
பெரு மதிப்பிற்குரியவன்:அவனுக்குரிய கண்ணியத்தில் எவருக்கும் எத்தகைய பங்கும் கிடையாது!
''அவன் தான் அல்லாஹ்!அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு எவரும் இல்லை!அவன் தான் அரசன்: மிகவும் தூய்மையானவன்!முழுக்க முழுக்க சாந்தியுடையவன்:அமைதி அளிப்பவன்.பாதுகாவலன்:அனைவரையும் மிகைத்தவன் தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்:பெருமைக்குரியவன்.தூய்மையானவன் அல்லாஹ்:மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு!''(59:23)
12)அல் காலிக் :
பொருத்தமான,வலிமையான ஆற்றல்களையும் வழங்கும் உயர்ந்தவன்.அனைத்தையும் படைத்தவன்!
13)அல் பாஃரி:
அடிப்படையற்றவற்றிலிருந்து உருவாக்கியவன்:ஈடு இணையற்ற படைப்பாளன்!
14)அல் முஸவ்விர்:
படைப்பினங்களுக்கு உருவம் தந்தவன்!
''அவனே,(உங்கள் அன்னையரின் )கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கிறான்!''(3:6)
''அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான் :உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான் '' (40:64)
''அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான்.அவனுக்கு மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன ''(59:24)
15)அல் கஃப்ஃபார்:
அதிகமதிகம் மன்னிப்பவன்:மேலும்
''நான் (நூஹ் (அலை) கூறினேன் :''உங்கள் இறைவனிடம் மன்னிப்பு கோருங்கள்.ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.(71:10)
16)அல் கஹ்ஹார் :
தம்முடைய படைப்பினங்கள் மீது பரிபூரண ஆதிக்கம் உள்ளவன்.
17)அல் வாஹித்:
தனித்தவன்,இணை-துணை இல்லாதவன் .
''(அன்று அழைத்துக் கேட்கப் படும் )''இன்று ஆட்சியதிகாரம் யாருக்கு
உரியது ?''(அனைத்துலகமும் கூறும் )''எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது!''(40:16)
18)அல் தவ்வாப்:
மக்களின் நிலை குறித்து கவனிப்பவன்:மேலும்,பாவம் புரிவோரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்!
'பின்னர் ,அவர்கள் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் மீது கருணை பொழிந்தவன்.திண்ணமாக, அவன் மிக மன்னிப்பவனும்,கருணையுடையவனாய் இருக்கிறான்!''(9:118)
19)அல் வஹ்ஹாப் :
சுயநலமற்றவன்:வாரி வழங்குபவன்!
''மேலும்,எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குபவனாக!திண்ணமாக,நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கிறாய்!''(3:8)
20)அல் கல்லாக்:
ஒவ்வொரு விதத்திலும்,ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றையும் படைக்கக் கூடியவன்: படைப்பியலில் முழுமையானவன்!
''வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ,அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவா?ஏன்,இல்லை?நன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே!''(36:81)
21)அர் ரஸ்ஸாக்:
படைப்பினங்களுக்கு நிறைவாக உணவளிப்பவன் ;அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்பவன் !
22)அல் மதீன்:
சக்தி வாய்ந்தவன் ;அதிகாரமுள்ளவன் !
''நிச்சயமாக அல்லாஹ்வே,உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும்,வலிமை மிக்கவனாகவும் இருக்கிறான்''(51;58)
23)அல் ஃபத்தாஹ்:
சிரமங்களைப் போக்குபவன் ;படைப்பினங்களுக்கு மத்தியில் நீதனமாகத் தீர்ப்பளிப்பவன்!
24)அல் அலீம்;
மக்களின் சொல்,செயல்பாடுகள் குறித்து நன்கு அறிபவன்;எண்ண ஓட்டங்களையும் அறிபவன்!
''கூறும்:நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான்.பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான்.அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்''(34:26)
25)அல் முஹீத்:
அனைத்துப் படைப்புகளையும் சூழ்ந்து கொண்டுள்ளவன்.எந்தப் பொருளும் அவனுடைய ஞானத்தை விட்டு,ஆற்றலை விட்டும் வெளியேறுவதில்லை!
''ஆயினும்,அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான் ''(85:20)
திருநாமங்களின் அர்த்தங்களை அவன் நாடினால் தொடந்து பார்ப்போம்.
சகோதரி.
ஆயிஷா பேகம்.
Tweet | ||||||
No comments:
Post a Comment