Monday 4 February 2013

வென்று காட்டுவோம்..!!


இறைவனின் சாந்தியும், சமாதானமும் இந்த பூமியில் வாழும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக..

இது பெண்களுக்கான பதிவு :

பிப்ரவரி 4---உலக புற்று நோய் தினமாக கொண்டாடப் படுகிறது. கேன்சர் அப்டின்னு சொன்னதும் பெண்களாகிய நமக்கு உடனே நினைவுக்கு வருவது மார்பக புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும் தான்...முன்பெல்லாம் படங்களில் ஹீரோவையோ அல்லது ஹீரோயினியையோ  சாகடிக்கிறதுக்கு  உதவியா இருந்த கேன்சர், இப்ப சர்வ சாதாரணமா அனைவரும் கேள்வி படும் விசயமா போயிடுச்சு..


கேன்சர் அப்டிங்கிற,  வார்த்தை எப்பவுமே எல்லாருக்கும் கொஞ்சம் பயம் தரக் கூடியது தான்... இந்தியாவில் மட்டும் வருசத்துக்கு எழுபது ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார்களாம்... இது 2030-ல்  பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்குன்னு ஒரு மருத்துவ அறிக்கையின் குறிப்பு சொல்லுது... இனி வருங்காலங்களில் 25 பெண்களில் 1 பெண் இதன் பாதிப்புக்கு ஆளாக நேரிடுமாம்.இதை எழுதுகிற நானோ அல்லது படிக்கிற நீங்களோ கூட இதில் இருந்து தப்ப முடியாது... இதை பயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. முன்பு 40-ல் இருந்து 50 வயதுக்குள் இருப்பவர்கள் , அதிலும் பரம்பரையில் யாருக்காவது இருப்பவர்களுக்கு தான் இதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் 25 வயதில் இருந்தே இதை எதிர்பார்க்கக் கூடிய அளவு இதன் தாக்கம் இருக்கிறது.



என்ன காரணங்கள்..??


1. பரம்பரையில் யாருக்காவது இருந்திருந்தால்..

2. மிக இளம் வயதிலேயே பூப்படைந்து இருப்பது..


3. மிக தாமதமான மெனோபாஸ்..55 வயதுக்கு மேலும் மெனோபாஸ் வராமல் இருப்பது..


4. அதிகப்படியான எடை.. அதிக கொழுப்பு ஹார்மோன்களில் மாற்றத்தை கொண்டு வருகிறது..இது ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். இது ஆபத்தான விசயமாகும்..


5. வருடக் கணக்கில் எடுத்து கொள்ளும் கருத்தடை மாத்திரைகளும், மெனோபாஸ் பின்பு எடுத்து கொள்ளும் அதிகப்படியான ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியும்.. 


6. மது அருந்துதல்.புகை பிடித்தல்.


7. குழந்தை இல்லாமல் இருத்தல்.


8. அதிகப்படியான மன உளைச்சல்.


9. இது எதுவுமே இல்லாமலும்.


நாமே எப்படி அறிந்து கொள்வது..??

1. செலவில்லாத ஒண்ணு தான்..நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய பரிசோதனை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நின்ற பின்னர் ஏழு நாட்களுக்கு பின்  (இது முக்கியம்) ஒரு குறிப்பிட்ட நாள்களில், நம் மார்பங்களில் எதுவும் மாறுபாடோ, அல்லது சிறு கட்டிகளோ இருக்கான்னு கண்ணாடி முன்பு நின்று கொண்டு நேராகவும், கைகளைத் தூக்கியும் பரிசோதித்து கொள்ளுதல்.


2. அதே போல படுத்துக் கொண்டும் பரிசோதித்து கொள்ளுதல்.

என்ன அறிகுறிகள்..??


1. சிறு கட்டிகள் கைகளுக்கு தட்டு படுதல்


2. திடிரென்று அளவில் வேறுபாடு, பொதுவாக அனேகருக்கு இரண்டு மார்பங்களின் அளவுகள் ஒன்று போல் இருப்பதில்லை.

3. காம்பைச் சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள்.

4. காம்பில் இருந்து ரத்தமோ, நீரோ வடிதல்.

5. காம்பு உள்வாங்கி இருப்பது.

6. தோல் சுருங்குதல், அல்லது தடித்தல்.

7. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி தவிர திடீரென வலி ஏற்ப்பட்டால்.

4.கண்டறியும் மருத்துவ சிகிச்சை முறைகள் .??


1.மேமோகிராம் என சொல்லக் கூடிய மார்பங்களை எக்ஸ்ரே செய்யக் கூடிய சிகிச்சை முறை..

2.அல்ட்ரா சவுண்ட் என்ற  அதிகப்படியான அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தில் செலுத்தி, மார்பகத்தின் கட்டி திட வடிவத்தில் உள்ளதா..?
அல்லது திரவ வடிவத்தில் உள்ளதா என கண்டறியும் முறை..

3.நீடில் பயாப்ஸி எனப்படும் மிக நுண்ணிய ஊசியை உள்ளே செலுத்தி கட்டியில் இருந்து சில செல்களை எடுத்து பரிசோதிக்கும் முறை.

5.வந்த பின் சிகிச்சை முறைகள்..??


1.கீமோதெரபி, ஹார்மோனல் தெரபி, அறுவை சிகிச்சை,(லக்பாக்டமி,மாஸ்டெக்லொமி, ரேடிகல் மாஸ்டெக்டமி,மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி) 


இத பத்தி எல்லாம் நாம பெரிசா கவலப் பட வேணாம்..இது நோயோட தீவிரத்தைப் பார்த்து டாக்டர் தீர்மானிப்பது..நோய் இருக்குன்னு தெரிஞ்ச உடனே நாம செய்ய வேண்டிய ஒன்று, ஒரு நல்ல டாக்டரை தேர்ந்தெடுப்பது மட்டுமே. என்னடா இவுங்க ஏதோ வந்தா போலவே பேசுராங்கன்னு நினைக்க வேணாம்..எப்படி நமக்கு இது வரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லையோ, அதே போல இது வராமல் இருப்பதற்கும் உத்திரவாதம் இல்லை. நம் எல்லாருக்கும் பிரசவ வார்டுக்குள்ள போற வர தான் பயம் இருக்கும்.அதுக்கப்பறம் நம் உடம்பு நமக்கில்லை அப்டிங்கிற உணர்வு வந்திடும்.ஏன்னா அங்க நம்ம பேச்சுக்கு வேலை இல்ல. உள்ள எதுன்னாலும் நாம தான் தாங்கியாகணும்..அதே மனநிலை தான் இங்கேயும்.



சரி இத எப்டியாவது தவிர்க்க முடியுமான்னு ..நம்மால செய்ய முடிந்த சில வழிமுறைகள பார்க்கலாம்.முக்கியமா உடல் எடை  கல்யாணம் வரை உடலை பார்த்து பார்த்து வைத்து கொள்ளும் பலரும் ஒரு குழந்தை பிறந்ததும் அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல இருப்பது..எப்ப நாம போடும் பிளவ்ஸ் ஆர் சுடிதார் டைட் ஆகுதோ அப்பவே சுதாரிச்சுக்கணும்.உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி என எந்தந்த வழியில் முடியுமோ அதை செய்து  நம் உயரத்திற்கு ஏற்ற சீரான உடல் எடையை கொண்டு வரணும்.அதை எப்போதும் ஒரே மாதிரி கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது அவசியம்.

மனதை எப்போதும் சந்தோசமா வைத்திருப்பது..அது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று என்ற போதும் அதை முடிந்த வரை கடைபிடிக்கணும்..தினமும் நமக்கே நமக்காக ஒரு மணி நேரத்தை நமக்கு பிடித்த விதமா செலவு செய்யக் கத்துக்கணும்.அது புக் படிப்பதாக, காலார நடப்பதாக , தையலாக,பாடம் சொல்லிக் கொடுப்பதாக, குறுக்கெழுத்து போட்டியை கண்டு பிடிப்பதாக, நட்புடன் அரட்டை அடிப்பதாக, குழந்தைகள் விளையாட்டை வேடிக்கை பார்ப்பதாக அப்டின்னு  எதுவாவேனும் இருக்கலாம்.அது நம் அன்றைய கவலைகளையும், டென்ஷனையும் போக்க ரெம்ப உதவியா இருக்கும்.

எல்லாம் சரி தான் வந்துருச்சு என்ன பண்ண அப்டின்னா ..?? அப்டியே அத தூக்கி விதி மேல பழிய போட வேண்டியது தான்...அது , ஏன் என் மேல இப்டி ஒரு பழியப் போட்ட அப்டின்னு கேக்க போறதில்ல..அதோட சொந்த காரங்களும் நம்மக்  கிட்ட பஞ்சாயத்துக்கு வரப் போறதில்ல.. அப்றம் என்ன..? :) நம் வாழ்க்கையில நடக்கும் சில நிகழ்வுகள் நம்மனால தவிர்க்க முடியாதது. அது ஏன் நடக்குது.. எதுக்கு  நடக்குது என தெரியாமலே எல்லாமே இறையின் நாட்டமுன்னு சொல்றத போல இதையும் அவனின் நாட்டம் அப்டின்னு எடுத்துட்டு  இதை தாங்க கூடிய அளவு மனபலத்தையும், உடல்நலத்தையும் தா அப்டின்னு வேண்டுறத தவிர வேற வழி இல்லை..

இப்ப யூ டியூப்பில் அமெரிக்கால இருக்கிற  டலியா அப்டிங்கிற 12 வயசு சின்ன பொண்ணு ரெம்ப பிரபலம்..அந்த பெண்ணின் உற்சாகமான பேச்சுக்களும், செயல்களும், அழகாக பதிவு செய்யப்பட்டு இருக்கு..அந்த பொண்ணுக்கு 7 வயதில் முதல் முதல கேன்சர் வந்திருக்கு..சரியான மருத்துவ சிகிச்சையும், டலியாவின் மன உறுதியும், குடும்பத்தின் ஆதரவும் ( இது ரெம்ப முக்கியம் ) அதை விரட்டி அடிச்சுருக்கு..எல்லாம் கொஞ்ச காலம் தான் திரும்பவும் கேன்சர்.

இந்த முறை டலியாவை நியுரோபிளாஸ்டோமா, லுக்கோமியா அப்டிங்கிற எழும்பு மஜ்ஜையில் தாக்க கூடிய கேன்சர் தாக்கிருக்கு..அறுவை சிகிச்சை செய்தாலும், செய்யலைனாலும் இந்த சிறுமியின் ஆயுட்காலம் இன்னும் 4 மாதம் முதல் 1 வருடம் தான் அப்டின்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க.ஆனா இது எத பத்தியும் கவலப் படாம அச்சிறுமி மிக சந்தோசமா தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தன்னை போல பாதிக்கப் பட்ட சிறுவர், சிறுமிகளுடன் நட்பு பாராட்டிட்டு, அடுத்தவுங்களுக்கு எடுத்து காட்டா வாழ்ந்துட்டு இருக்கு..இறைவன் டலியாவுக்கான நற்கூலிகள் அனைத்தையும் வழங்க என் து ஆக்கள்..

டலியாவின் யூ டியூப் லிங்க்..https://www.youtube.com/watch?v=DwKRAWMiBwo

சகோதரி
ஆயிஷா பேகம். 

Monday 5 November 2012

முடமாக்கும் கோழிகள்...!!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வாழ்க்கை எனும் பயணத்தில் தான் நமக்கு எத்தனை, எத்தனை கதாபாத்திரங்கள்???
எல்லாப் பாத்திரங்களையும் திறம்பட நடத்தும் பெண்களைக் கூட சறுக்கச் செய்யும் ஒரே பாத்திரம் மாமியார் என்றால் அது மிகையாகாது.. மாமியார் என்ற பதவியை அடைந்தவுடன் எங்கிருந்து தான் அதிகாரமும், கர்வமும் வருகிறதோ பல பெண்களுக்கு???? அப்பப்பா.. நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

என் உறவுகளின் மத்தியில் சமீப காலங்களில் அடுத்தடுத்து மாமியார் என்ற பெயரில் இருக்கும் பெண்களால் நடந்த குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்ட, வேதனையின் வெளிப்பாடே இந்த பதிவுக்கு காரணம்...தன்  மகனுக்கு பார்த்து,பார்த்து திருமணத்தை பண்ணி வைத்து விட்டு, பின் அதில் எப்போது பார்த்தாலும் குறை கண்டு பிடிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது..??

இந்த உலகில் எல்லா பெண்களாலும் நல்ல அம்மாவாக இருக்க முடிகிறது...ஆனால் ஒரு சிலரால் தான் நல்ல மாமியாராக பெயர் எடுக்க முடிகிறது.. தன் பிள்ளைகள் செய்யும் பெரும் தவறுகளைக் கூட எளிதாக பொறுத்து கொள்ளும் ஒரு பெண்ணால், தன் வீட்டிற்கு வந்த பெண்ணின் சிறு தவறை கூட பொறுத்து கொள்ள முடியாதது ஆச்சரியமான ஒன்றே..

இங்கு அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி ஒரு உறவை பிடிக்கும் என்றால் அது தாய் என்ற உறவாகத் தான் இருக்க முடியும்.. அதற்காகவே பல ஆண்கள் தாயின் பேச்சை தட்டுவது இல்லை...இந்த ஒன்றை மட்டும் சாதகமாக எடுத்து கொண்டு நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பெண்கள் தான் எத்தனை பேர்..??
தன்னுடைய பெண் மட்டும் புகுந்த வீட்டில் நன்றாக வாழ வேண்டும்..அதுவும் மாமியார், மாமனார் என எந்த அதிகப்படி சுமை(?????)யும் இல்லாமல், தனி குடித்தனமாக ஜாலியாக அவளின்  இஷ்டப்படி வாழ வேண்டும் என நினைக்கும் எத்தனை அம்மாக்கள் தன் ஆண் பிள்ளைக்கு பொறுப்பு வரட்டும் என தனி குடித்தனம் வைக்கின்றார்கள்..?? தான் பெற்ற பெண்ணுக்கு ஒரு நீதி, வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு ஒரு நீதி இவர்களின் ராஜ்ஜியத்தில்.

திருமணம் செய்யும் வரை தன் முந்தானையை பிடித்து வலய வரும் தன் மகனை அவ்வளவு எளிதாக விட்டு விட மனம் வருவதில்லை.. அதிலும் நல்லது கெட்டது தெரியாமல் தன் அம்மாவின் எல்லா வார்த்தைகளுக்கும் எதிர் வார்த்தை பேசாமல் ஆமாம் சாமி போடும்  பிள்ளைகள் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம்....அவர்களுக்கு இந்த உலகமே தன் கையில் என்ற நினைப்பு வந்து விடுகிறது
அதிலும் திருமணம் ஆகி  மூன்று, நான்கு வருடங்கள் ஆகியும் பிள்ளை இல்லாமல் இருந்து விட்டால் அவ்வளவு தான் .. ஏதோ அந்த பெண் செய்யக் கூடாத தப்பை செய்து விட்டதை போல ஜாடை மாடையாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எவ்வளவு பேச்சு க்கள் ??? 

மாமியார் தான் குழந்தைஇல்லாததை  குத்தி காட்டி பேசுராங்கன்னா வீட்டிற்கு வரும் உறவினர்களும் வெந்த புண்ணில் அவர்கள்  பங்குக்கு வேலை பாய்ச்சுவார்கள். "ஏன்மா.. மருமக சும்மா தான் இருக்கோ??" னு சொல்லிட்டு டீயைக் குடித்து விட்டு அவர்கள் வழியை பார்த்துக் கொண்டு அவர்கள் போய்விடுவார்கள். ஆனால் இங்க ஓய்ஞ்சு இருந்த சண்டை திரும்ப ஆரம்பம் ஆகிடும்.
உறவினர்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?? பிள்ளை இல்லாட்டி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக போறீங்களா?? இல்லை தானே?? அப்புறம் எதுக்கு கேள்வி?? உங்க மகள இப்படி கேட்டா உங்கள் மனது என்ன பாடு பாடும்?? புரிந்து கொள்ளுங்கள்.அடுத்தவர் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள். நமது ஒவ்வொரு செயலும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம்.
பெண்ணின் உணர்வுகளையும், வலிகளையும் ஆண்கள் புரிந்து கொள்ள வில்லை என்றால் கூட ஏற்று கொள்ளலாம் போல.. ஆனால் அனைத்து வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்த , உணர்கின்ற பெண்களே இதை புரிந்து கொள்ளாதது வேதனையான ஒன்றே..இங்கு அதிகம் பெண்களின் நுட்பமான உணர்வுகள் பாதிக்க படுவது ஆண்களை விட பெண்களாலே..எப்படி தான்  ஏற்கனவே மனம் புண்பட்டிருக்கும் பெண்ணை நோகடிக்க மனம் வருதோ தெரியல..
இந்த குழந்தை இன்மை பிரச்சனையை காட்டி வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை தானும் ஒரு பெண் என்பதை மறந்து பையனிடம் இருந்து பிரிக்க நினைக்கும் மாமியார்கள் தான் எத்தனை பேர்..?? தன் மருமகளின் மீது உள்ள வெறுப்பால் பிரிக்க நினைக்கும் மாமியார்கள் அதனால் பாதிக்கப்படப்போவது  தன் மகனின் வாழ்க்கையும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்..??

ஒருவரை அடித்து தான் முடமாக்க வேண்டும் என்பது இல்லை..மனதை குத்தி ரணமாக்கும்  வார்த்தைகள் போதும் அவர்களை முடமாக்க...எத்தனை சகோதரிகள் இந்த மாதிரி பேச்சை தவிர்க்க வெளியில் வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கி இருக்கிறார்கள் தெரியுமா?? அவர்களின் சாபம் இப்படி செய்பவர்களை சும்மா விடாது... எந்தவொரு பரக்கத்தும் ஆண்டவனின் கருணை இல்லாமல் நமக்கு கிடைக்காது என்பதை ஏனோ இப்படி பேசுபவர்கள் மறந்து விடுகிறார்கள்..

"பாதிக்கப்பட்டவர்களின் பிராத்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடையும் இல்லை" என்று நம் மார்க்கம் கூறுகிறது.  இறைவனை அஞ்சிக் கொள்வோம்..


நீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். --இப்னு அப்பாஸ்(ரலி)-- (புகாரி -2448.)
இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஆரம்பத்தில் சரியான புரிதல் இல்லாமல் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் போது(கண்டிப்பாக ஏற்படும்) அதை அழகான முறையில் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய பெரியவர்களே அதை ஊதி பெரிதாக்கி அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதை என்னவென்று சொல்வது????

இதே போல பல நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இப்போதெல்லாம் இறைவனிடம் வேண்டும் பொழுது, உன் நாட்டம் இருந்து நான் மாமியார் ஆனால், என் மருமகளுக்கோ, மருமகனுக்கோ எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருக்கும் நபராக என்னை ஆக்குவாயாக இறைவா என்று கேட்கிறேன். நீங்களும் அவ்வாறே துவா கேளுங்கள். நமக்கு அடுத்த தலைமுறையாவது இந்த பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கட்டும். அதற்கு நாம் முயற்சி எடுப்போம், ஏனெனில் இது நம் கையில் உள்ள விஷயம்.

வாழும் வாழ்க்கை ஒரு முறை தான் என்பதையும் அதை நல்ல முறையில் தானும் வாழ்ந்து, அடுத்தவர்களுக்கும் பாரம் இல்லாமல், முடிந்தால்  தன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய்யும் மனநிலையை இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.

ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்(5:32)
உங்கள் சகோதரி 
ஆயுஷா பேகம். 

Sunday 17 June 2012

திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..!


பிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..

அப்பெண்ணின் கம்ப்யூட்டரை ஓபன் செய்து பார்த்ததில் கடைசியாக இருந்த பதிவில் இங்கு காலிங்பெல் அடிக்கிறது யார் என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று இருந்தது..அதற்கு லைக் போட்டவர்களை முழுமையாக விசாரிக்கும் போது அவர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் ஆண்கள் என தெரிய வந்து, அவர்களை பிடித்து விசாரிக்கும் போது ஆமாம் நாங்கள் தான் அக்கொலையை செய்தோம் என்ற உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்கள்..

அவர்களின் வாக்குமூலம்..         
நாங்கள் பெண்கள் பெயரில் மெயில் ஓபன் செய்து கொண்டு அதன் மூலம் ஃபேஸ்புக்கில் பெண்களின் ஃப்ரெண்டாக சேர்ந்து கொள்வோம்.சில பெண்கள் தன் ஒவ்வொரு செயலையும் ''வால்''லில் பதிவு செய்வார்கள்..அவர்களிடம் நல்ல முறையில் பழகி அவர்கள் நாங்கள் தனியாக இருக்கிறோம் என பதிவு செய்யும் போது அவர்கள் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல போய் கத்தியை காட்டி அவர்களை அனுபவித்து விடுவோம்..இது போல பல முறை நடத்தி இருக்கிறோம்..ஆனால் யாரும் இது வரை போலீசுக்கு போனதில்லை..அதே போல பிரமீளா வீட்டுக்கும் போனோம்..ஆனால் அந்த பெண் சுதாரித்து போன் செய்ய போனதால் நாங்கள் கத்தியை வைத்து அந்த பெண்ணின் கையை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்ணை அனுபவித்தோம்..பிறகு அந்த பெண் காட்டி கொடுப்பார் என தோன்றியதால் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விட்டோம் என்பது தான் அந்த வாக்கு மூலம்..



இதே போல எத்தனை மோசமான கதைகள் இந்த ஃ பேஸ்புக் மூலம்..! ஆனாலும் பெண்களுக்கு புத்தி வந்த மாதிரி தெரிய வில்லை ..இந்த விசயத்தில் தன் சுய அறிவை உபயோகிப்பதில்லை என்ற முடிவில் இருப்பார்கள் போல உள்ளது.. ! தன்னை மிகவும் விரும்பும் தாய்,தந்தை உடன் பிறந்தவர்கள்,தாத்தா,பாட்டி,மற்றும் உறவுகளுடன் பேச முடியாத இவர்கள் போலித்தனமான பாசங்களையும்,காரியத்திற்காக புகழப்படும் புகழ்ச்சிகளையும்,ஒன்றுக்கும் உதவாத நட்புகளையும் உண்மை என நம்பி கொண்டு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாகவும் கோவமாகவும் வருகிறது..!

இதன் மூலம் வரும் பின்விளைவுகள் தெரிந்தே சில பேர்..! தெரியாமலே சில பேர்..! எல்லாஇடங்களிலும் ஆட்டு முகம் பொருத்திய ஓநாய் மனிதர்கள் இருக்கிறார்கள், என தெரியாமல் போலித்தனமான,கேவலமான மனதுடைய  மனிதர்களை நம்பி தன் புகைப்படம் முதற்கொண்டு தன் வீட்டு விவரங்கள் யாவற்றையும் பொதுவில் பந்தி வைக்கும் இவர்களை என்ன செய்வது..? இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என எப்படி அறிவது..? 

அப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவிப்பதற்கு தான் நிறைய தனிப்பட்ட  வழிமுறைகள் இருக்கிறதே பின் என்ன வந்தது இவர்களுக்கு..? அந்த காலத்தில் படிக்காதவர்களான நம் பாட்டிகளிடம் இருந்த ,எதை வெளியில் சொல்ல வேண்டும்,எதை வெளியில் சொல்ல கூடாது என்ற தெளிவும்,அறிவும்,அதிகம் படித்த இந்த மாதிரி பெண்களிடம் இல்லை என்பதே உண்மை .இவர்கள் நிஜத்துக்கும் ,நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத படித்த மேதைகள்..! 

இன்னும் வேறு வகை பெண்கள் சிலர் இங்கு உண்டு ..காதல் மொழி பேசி வரும் நபரிடம் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி உருகி உருகி காதலித்து பின் வெளி இடங்களில் இருவரும் பல முறை சந்தித்து,தன் கற்பை இழந்த பின் அவனுக்கு இவள் அலுத்து அவன் தன் சுயரூபத்தை காட்டியதும் கண்ணீர் விட்டு அழுது மனம் நொந்தபடி கிடப்பது என்று...! இதில் சில தைரியமான பெண்கள் தன் முகத்தை மூடி கொண்டு போலீசில் புகார் கொடுக்க வரும் போது உங்கள் சிந்திக்கும் திறனை எங்கு அடகு வைத்தீர்கள் என கேட்க தோன்றுகிறது...! 

இரைக்காக காத்து இருக்கும் வேடன் போல, பெண் மூலம் தேவையை விரும்புபவன், தேன் சொட்டும்,ஆசை வார்த்தைகளையும்,அதிக படியான வீண் புகழ்ச்சியையும்,பசப்பலான நடிப்பையும் வெளிப்படுத்த தான் செய்வான்..அவனுக்கு தேவை இரை ..அதற்காக என்ன வேண்டுமாலும் செய்வதற்கு தயாராக தான் இருப்பான்..நோக்கம் நிறைவேறியதும் வேறு ஒரு புதிய இரையை தேட போய் விடுவான்..இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்க படுவதென்னமோ பெண் தான்..வாழ்வில் சில விஷயங்களை நாம் இழந்தால் இழந்தது தான்..! அதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..! 


தவறு செய்யும் சில ஆண்களை குற்றம் சொல்லும் இந்த இடத்தில் இதே போல குற்றம் செய்யும் பெண்களையும் குறிப்பிட வேண்டும்.. தன் அழகால் வசீகர பேச்சால் ஆண்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் பணத்தை சூறையாடும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்...! தன் குடும்பத்தை விட்டு தன்னந்தனியாக,தனக்கு என்று பெரிதாக ஆசை படாமல் தன் குடும்ப கஸ்டத்தை மட்டுமே மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் பலர் இங்கு உண்டு..

வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்..! சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..!  

இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா..? என்றால் கட்டாயம் இருக்கிறது..! இங்கு எத்தனையோ சகோதர சகோதரிகள்,தங்களுடைய பல வேலை பளுக்களுக்கு இடையில் நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்..! மேலும்  இதன் மூலம் பல நல்ல சமுதாய மாற்றங்களும்,, கல்வி உதவிகளும்,உயிர் காக்கும் பல மருத்துவ தேவைகளும்,பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது ..எந்த ஒன்றும் நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பது போல இந்த ஃபேஸ்புக்கையும் நாம் பல நல்ல ஆக்கபுர்வமான விசயங்களை தெரிந்து கொள்வதற்கும்,பகிர்ந்து கொள்வதற்கும் பயன் படுத்தலாம்..

மேலும் இங்கு பல  நல்ல நட்புகள் உள்ளன.. நல்லதை எடுத்து சொல்லி அடுத்தவர் தவறு செய்யும் போது தனி பட்ட விதத்தில் திருத்தும் அருமையான நட்புகள் உண்டு..என்னை போல நல்ல நட்பின் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட பலர் இங்கு உண்டு ..வரம்பு மீறாத தன்மையோடும் சரியான புரிதலோடும்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இறைவனுக்கு மட்டுமே பயந்து நட்பு கொண்ட பலர் இங்கு உண்டு ..

ஆனால் சமீப காலங்களாக கேள்வி படும் விசயங்கள் நன்மையை விட இந்த இடம் பல தப்பான செயல்களுக்கு தான் அதிகம் துணை போவதாக  தெரிகிறது..எல்லா இடத்திலும் எந்த வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது..முக்கியமாக பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எந்த வழியில் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..எந்த வழி சரியான வழி என்பதை சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது..

அனைவருக்கும் தெரிந்த உவமை தான் ஆனால் நல்ல உவமை :-
சேலை முள்ளில் மீது பட்டாலும் இல்லை,முள் சேலை மீது பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..!

டிஸ்கி:-தன் பொறுப்புகளையும்,தன் கடமைகளையும்,புறக்கணித்து, நாளை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற நிலை மறந்து,இந்த மாய உலகத்தில் தன்னை முழுவதுமாக மூழ்கடித்து தன் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் யாராவது ஒரு சகோதரி இந்த பதிவை படித்து விட்டு தன்னை மீட்டெடுத்து கொண்டார் எனில் அது தான் இந்த பதிவின் நோக்கமும் வெற்றியும்..!

நன்றி---சிநேகிதி பத்திரிகை..  
உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்..

Monday 19 March 2012

திசை மாறும் தூண்கள்..!

நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் இளமை பருவம்..!  ஆண் ,பெண் என இரு தரப்பினருக்குமே எவ்வளவு ஒரு அழகான ,ஆக்கபூர்வமானபருவம்..! ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றலும் அறிவும்,துணிவும்,துடிப்பும் அவர்களின் எழுச்சியும்மிக பெரும் சக்தி என்றால் அது மிகையில்லை..! ஒரு சமுதாயத்தில் எந்த ஒரு சமூக மாற்றமும் இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் நடை பெற்றதில்லை..! தன் வயதின் முழுசக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தும் பருவம் இளமை பருவம் ..!


ஆனால் தன் சக்தியை ,தன் தேவையை ,தன் பொறுப்பை ,சரியாக இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்றால் பெருமளவு இல்லை என தான் தோன்றுகிறது...! இப்போது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம்இளைஞர்களாக தான் இருக்கிறார்கள்...! தன் தவறான நடவடிக்கையின் காரணத்தால் குற்றங்களை செய்து விட்டு தன் வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியை சிறை வாழ்க்கையில் கழிக்க வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறார்கள்...!


நாம் அனைவருமேசமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது..! தான் கற்பிக்கும்பள்ளியில் தன் மாணவனால் ஒரு ஆசிரியை பள்ளி வளாகத்தில் கொல்லப் பட்டதும்,ஒரு பெண் நம்பிக்கையோடுநண்பனாக பழகியவர்களாலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஆன இரு நிகழ்வுகள் தான் அவை...! சமூகத்தில் மீது அக்கறையும்,பொறுப்பும் கொண்டஒவ்வொருவரையும் அதிர்ச்சியும்,கவலையும் கொள்ள வைத்த சம்பவங்கள் இவைஎன்றே சொல்லலாம்.


இவை மட்டும் அல்லாதுபள்ளிப் பருவ காதல்,பள்ளிப் பருவ கர்ப்பம்,பள்ளிப் பருவ குடிப்பழக்கம்,வகுப்பிலேயே சக தோழியை மோசமாக படம் எடுத்து அனைவருக்கும் அனுப்பி வைப்பது,தன் ஆசிரியையை படம் எடுத்து இணையத்தில் தவறான முறையில் பதிவு செய்வது ,பெற்ற மகனே தன் சொந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆள் அனுப்பி திருட வைத்தது, தங்கையாக நினைக்கக் கூடிய நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடுவது என்று இப்படிஇன்னும் நிறைய விசயங்கள்.

ஆரம்பத்தில்..! இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா..! நடக்குதா..? என  கேட்ட செய்திகள் எல்லாம் இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது..! நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன ..? என்றுமனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்...! நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது..! தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம்..! அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும்,நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது...!   


முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போதுதன்கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது...! அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது..! சரி,இது போல நடக்க என்ன காரணம்..? யார் காரணம்..?  என பார்த்தால்குற்றம் சுமக்க வேண்டியவர்களில்முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்..! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்..! தந்தை என்பவர்பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்

இப்போது அநேக வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான்..! இரண்டு என்பது கூட இப்போது குறைந்து ஒன்று என்பது தான் அதிகளவில் இருக்கிறது..! காரணம் வேலைக்குப் போவதால் கவனிக்க ஆள் இல்லை என்பது..! பிள்ளையை யார் பார்த்துக் கொள்வது..? வீட்டில் சரியான வழிகாட்டுதலோடுபெரியவர்கள் இருந்தால் சரி, இல்லை என்றால் என்ன செய்வது..? வேறு வழி அதற்கென்றே இருக்கும் ஹோம்களே கதி..! சிறு வயதில் இருந்தே தாய் ,தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போது ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்தஉலகத்தில் உலா வரத்தொடங்குகிறது...!அதில் இப்போது தாய்க்கும்,தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை...! இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்..!


பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை இப்போது அதிகளவு காணப்படுகிறது.,,! உலகத்திலேயே தன் மகன் தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்..! அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை எல்லா இடத்திலும் வாரி இறைக்கும் பெற்றோர் அதிகம்..! நல்ல வசதியையும்,நல்ல படிப்பையும் கொடுக்க நினைக்கும் பெற்றோர் மறந்தது தன் மகனை சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக வளர்க்க வேண்டும் என்பதை..!


பிள்ளைகள் கேட்கும் எல்லா நவீன பொருள்களையும் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அவர்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்துகிறார்களா என கவனிக்காமல் விடுவது தான் அவர்கள் செய்யும் தவறு.! ..பருவ வயதில் அது ஆணாகட்டும்,அல்லது பெண்ணாகட்டும் இருவருக்கும் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தான சரியான வழிகாட்டுதல் தேவை..! கண்டிப்பா இப்போது தான் அவர்களின் மீது கூடுதல் அக்கறையும் கவனமும் தேவை...!



ஆனால் பெற்றோருக்கு அவர்களோடு மனம் விட்டு பேச நேரம் இருப்பதில்லை..!பெரும்பாலான பெற்றோருக்கு நம் பிள்ளையின் நண்பர்கள் யார் எனத் தெரியாது..! அவர்கள் எப்படிப் பட்ட நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது..! பிள்ளைகளும் இப்போது பெற்றோரை எதிர்பார்பதில்லை..!அவர்களுக்கு இப்போது தேவை பணமும் அவர்கள் விரும்பும் நண்பர்களும் தான்..! இந்த மாதிரி வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் பெற்றோர்கள் என்பவர்கள் தன் தேவைக்காக பணம் கொடுப்பவர்கள் மட்டும் தான்..!


குற்றங்களின் காரண கர்த்தாவில் இப்போது இணையமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை...! இணையத்தில் அதற்கென்று தனியாகத் தேடித் போக வேண்டாம் நாம் வேறு ஒன்றைத் தேடி எழுத்தை தட்டினாலே வன்முறை குறித்தான விசயங்களும் ஆபாச படங்களும்,ஆபாச பதிவுகளும் வந்து கொட்டுகிறது..! இதில் தனிமை என்பது நல்ல தெளிவாய் இருக்கும் மனிதர்களையே சற்று நிலை தடுமாறச் செய்யும் விஷயம்...! இதில் எளிதில் உணர்ச்சி வசப்படும் டீன் ஏஜ்ஜில் இருக்கும் பிள்ளைகள் தனிமையில் இதைப் பார்த்தால் என்ன ஆகும்...?


இயல்பாகவே எதிர்பாலினர் குறித்தான தேடுதலும், சிந்தனையும்,அதிகம் இருக்கும்பருவம்இது...!சரியானவழிகாட்டுதலோடும்,தன்னம்பிக்கையோடும் வளர்க்கப் படும் பிள்ளைகளுக்கு இது ஒரு பொருட்டாக இருப்பதில்லை..! அவர்களுக்குத் தெரியும் நம் இலக்கு எது என்றும்..!  எதை நோக்கி நாம் போக வேண்டும் என்பதும்..! இந்த மாதிரி விசயங்களில் மாட்டிக் கொண்டால் நம் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால், அவர்கள் தன் நட்பு வட்டத்தையும் கவனமாக தேர்தெடுத்துக் கொள்கிறார்கள்..! பொதுவாக நட்பு வட்டம் என்பது எப்போதும் நமது சரி தவறுகளை திருத்தி அதை உரிமையாக எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும்...! தெளிவான மன நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு இயல்பாக தன் வயதிர்க்குண்டான  மனத்தடுமாற்றங்களை மிக எளிதாக கடந்து விட முடிகிறது ..!


ஆனால் சிறு வயதில் இருந்தே சரியான வழிகாட்டுதலோடு வளராத  பிள்ளைகளின் மனம் அதை நோக்கியே போகும்..! தப்பைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் தனிமையில் தன் இஷ்டத்திற்கு வளரும் பிள்ளைகளுக்கு, தப்பான விசயங்களை ஆரம்பத்தில் பார்க்கும் போது இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியும் ஒரு கட்டத்தில் போய் விடுகிறது...! எது சரி எது தவறு என்பதைத் தாண்டி தன் ஆசைகளையும் தேவைகளையும் எவ் விதத்திலும் நிறைவேற்ற கொள்ள துணிந்து விடுகிறார்கள் என்பதே உண்மை...! இது தான் மன வக்கிரத்தின் வெளி தெரியாத உச்சக்கட்டம்...! இவை தான் இந்த மாதிரி குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம்..!


சரி வேலைக்கு எல்லாருமா போறாங்க வீட்டில் அம்மா இருக்கும் பிள்ளைகளும் தானே தப்பு பண்ணுது என்று கேட்டால்...? உண்மை தான்.மறுக்க முடியாது...! ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்தப் பிள்ளை அதிக செல்லத்தால் தன் அறியாமை அம்மாவால் தன் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கிறது..! தன் தந்தையின் அருகாமை இல்லாமல் இருக்கிறது.


இதற்கான தீர்வாக சிறு வயதில் இருந்தேஅவர்களுக்கு ஊட்டப்படும் அழுத்தமான இறைநம்பிக்கை தான் சரியான ஒன்றாக இருக்கும்..! சிறு வயதாக இருக்கும் போதே அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விசயங்களை கதை சொல்வது போல சொல்லி,நன்மை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும் ,அடுத்தவர்களுக்கு தீமை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், இந்த உலகத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் நடக்க வேண்டியதன்  அவசியத்தையும் தெளிவாக புகட்டி விட வேண்டும்...!


சக மனிதர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகம்,மோசடி,பொய் பித்தலாட்டம்,ஏமாற்றுதல் போன் இன்ன பிற தவறான செயல்களை இறைவன் விரும்புவதில்லை என்பதையும் அவன் அது குறித்து கடுமையாக கோவப்படுவான் என்பதும் அவர்களின் மனதில் அழுத்தம் திருத்தமாக சிறு வயதில் இருந்தே பதிவு செய்ய பட வேண்டும்...!


நாம் அனைவருமே பொறுப்பாளிகள் ஆவோம்..! நாம் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவோம்..! அதற்கு சரியான காரணம் சொல்லப்பட வேண்டும்...! அதில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது...! சரியான முறையில் வளர்க்க படாத பிள்ளைகள் நாளை நமக்கு மிக பெரிய துன்பத்தை தர தயாராக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28) 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

Wednesday 14 March 2012

ரியாலிட்டி ஷோ..?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர் ,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டிஷோக்கள்..!

மாமியார் , மாமனார் , மருமகன் , மருமகள், அம்மா , பிள்ளை , பெண் ,நாத்தனார், மச்சினர், அண்ணன் மனைவி ,தம்பி மனைவி ,என ஒரு உறவு விடாமல் அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை கேட்கிறோம் என்ற பெயரில், தனிப்பட்ட உணர்வுகளை வெளிகொண்டு வருவதே இதன் அடிப்படை..!தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது எந்த பொறுப்போ ,அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும் வர்த்தகம் மட்டுமே.

பொதுவாக குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை சரியாகி விடும்..!  குடும்பத்தில் இருக்கும் வீட்டு பெரியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும்,உட்கார்ந்து பேசி ,எது சரி அல்லது எது தவறு என்று கலந்து ஆலோசிப்பது தான் சரியான வழி முறையாக இருக்கும்..! ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்த படாத, அவர்களை பற்றி எதுவும் தெரியாத மூன்றாம் நபரின் தலையீடு ஒரு மணி நேரத்தில்  குடும்ப விவகாரங்களை எப்படி தீர்க்க முடியும் என்பது தான் தெரிய வில்லை.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ,உறவுகளின் பிரச்சனையை சரி  செய்கிறோம் என்ற பெயரில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவை பார்க்க நேரிட்டது...! கணவர்கள் ஒரு புறம், மனைவிகள் மறுபுறம், நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற பெயரில் ஒருவர்..! அவர் சானலில் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு , உண்மையாக உழைக்கும் விதத்தில் அவரின் கேள்விகள், இருதரப்பினரையும் தூண்டும் விதத்தில் இருந்தது...! அவர் அப்படி கேட்டால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும்,வாக்கு வாதங்கள் அனல் தெறிக்க நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.! அவர் எதிர் பார்ப்பதும் அது தான்.


அதில் ஒரு கேள்வி..! கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயம்..!அதே போல மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயம்..! என்று. ..சொல்லவா வேண்டும் இந்த கேள்விக்கு பதில்களை..! போட்டி போட்டு கொண்டு சரமாரியாக கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருந்தது .அதில் ஒரு பெண் சொல்ல தகவல் உண்மையில் தூக்கிவாரிப் போட்டது..! இதை சொல்லி விட்டு பெரிய சாதனை செய்த மாதிரி பெரிய சிரிப்பு வேறு அந்த பெண்ணுக்கு..!அதை பார்த்ததும் யார் பெற்ற பிள்ளையோ ஆனால் கன்னத்தில் ஒன்று போடலாம் என்று தோன்றியதை தவிர்க்க முடிய வில்லை..! தன் கணவரைப் பற்றிய மிக சென்சிடிவான விஷயம் குறித்து ,அவ்வளவு எளிதாக யாருக்கும் வெளி தெரியாத,தெரிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு தகவல் அவர் சொன்னது...! இந்த பதிலை அந்த கணவரும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரின் முகத்தைப் பார்த்தால் தெரிந்தது.

எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..? வீட்டில் கணவனும் மனைவியுமாக உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி பகீரங்கப் படுத்த வேண்டிய தேவை என்ன.? தன் முகம் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த அளவு தன் தரத்தையும் ,தன் கணவனின் செயலையும் பறை சாற்ற வேண்டுமா ..?  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து தானே இருக்க வேண்டும்..? இந்த நிகழ்ச்சி அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதா..? முன் போல அந்த கணவரால் அந்த பெண்ணுடன் இயல்பாக இருக்க முடியுமா ..? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.

கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அழகான ஆழமான உறவு..! மற்ற எல்லா உறவிலும் மாற்று எவருடனும் ஒப்பீடு செய்ய முடியும்..! ஆனால் இந்த உறவை எந்த உறவோடும் ஒப்பிட முடியாதே..! கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவி யாரும் இங்கு உண்டா என்றால்,கண்டிப்பாக  இருக்க முடியாது..! அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மை...! இரு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த ,வாழ்ந்த இரு உயிர்கள் ஓருயிராக வாழ ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக இயல்பான ஒன்று..! ஆனால் அதை எல்லாம் தாண்டி சரியான பரிதலும்,ஒருவரின் பால் ஒருவருக்கு இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் ,நேசமும் இருந்து விட்டால் பிறகு எந்த வித பிரச்சனையும் அவர்களை ஒன்றும் செய்யாது.

அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குரான்2:187)

இந்த ஒரு ஆழமான வசனத்தின் மூலமாகவே கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது..! அது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு உணர்த்தப் பட்டு இருக்கிறது..! ஆடை எப்படி நம் மானத்தை காக்கிறதோ அப்படி தான் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தன் துணையின் குறையை, அந்தரங்கத்தை , ரகசியத்தை,காக்க வேண்டியது கடமை ஆகும்...! நமக்கு இயற்கையாக ஏற்படும் சில தேவைகளை,
தேடல்களை ஹலாலான வழியில் பெற வேண்டும் என்றால் கணவன் மனைவி என்ற பந்ததால் மட்டுமே சாத்தியம்...! அது தான் இறை வகுத்த சட்டமும்.

குறை இல்லாத மனிதர் என்று இவ்வுலகில் யாரும் உண்டா..? அப்படி இது வரை யாரும் இருந்து  இருக்கிறார்களா..? என்றால்அப்படி யாரும் இல்லை அப்படி யாரும் இருக்கவும் முடியாது ..! குறை, நிறை சேர்ந்தவன் தானே  மனிதன்..! .தன் துணையின் குறை பிடிக்க வில்லை என்றால் அதை மெதுவாக மாற்ற முயல்வது தானே புத்திசாலித்தனம்..! அந்தக் குறையும் நம் வாழ்க்கைக்கோ , மார்க்கத்திற்கோ, பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில்இல்லை என்றால் அதை அப்படியே மாற்ற முயலாமல் ஏற்றுக் கொள்வதே சரி. 

இங்கு முழுதாக, ஆணை அறிந்த பெண்ணும் இல்லை..! பெண்ணை, அறிந்த ஆணும் இல்லை என்பதே உண்மை..! அறிந்து கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை..! தேவையும் இல்லை..! இறையின் படைப்பு  அப்படி தான் படைக்க பட்டிருக்கிறது..! ஆணின் இயல்பு தன்மை வேறு..! பெண்ணின் இயல்பு தன்மை என்பது வேறு..! இதை அவரவர் இயல்பு படி சரியாக புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் தான் வெற்றியாளர்கள்...! இந்த சரியான புரிதல் என்பது ஒருவர் அடுத்தவர்  மீதான நேசத்தையும்,மதிப்பையும், மரியாதையும் கொடுக்கிறது...! குறைகளை மன்னிக்க சொல்கிறது..!.இந்த ஒற்றுமையின் காரணமாக நல்ல அறிவான,பண்பான சந்ததிகளை கொடுக்க முடிகிறது.

இந்த மாதிரி ஷோக்களை பார்க்கும் போது..! பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் வெளியிடும் வார்த்தைகளில் பொருட்டு விளையும் பின் விளைவுகளை நினைக்கும் போது அவர்களின் மீது பரிதாபமே வருகிறது. ஏற்கனவே உறவுகள் சிக்கலாகி கொண்டிருக்கும் காலம் இது...! உறவுகளின் எண்ணிக்கையும் சுருங்கி கொண்டு வருகிறது...! இதில் இருக்கும் உறவுகளையும்இல்லாமல் பண்ணுவதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி கண்ணுக்கு தெரியாமல் அதை பற்ற வைக்கும் வேலையை தான் சானல்கள் செய்து கொண்டு இருக்கின்றன.

ஒரு மனிதன் என்பதற்கு உரிய சரியான அர்த்தத்தோடு ஒருவன்  வாழ வேண்டும் என்றால் அவன் அங்கம் வகிக்கும் பாத்திரம் ( மகன்,சகோதரன்,கணவன்,மாமா,மச்சான்,நண்பன் ......) என அவன் பொறுப்பேற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தின் சார்பாகவும் அவன் நம்பிக்கையாகவும்,உண்மையானவனாகவும்,நேர்மையானவனாகவும்,நடுநிலை தவறாதவனாகவும் இருக்க வேண்டும்..! அவன் இல்லாமல் போனாலும், அவனின் நினைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருந்தது எனில் அது தான் அவன் இவ்வுலகத்தில் பெற்ற வெற்றி.

ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதா என்றால் எளிதில்லை..! இதற்கு தான் மறுமை குறித்தான சிந்தனை தேவை படுகிறது..! அனைவரும் சொல்வது தான் நமது இறப்பு என்பது எப்போது வேணாலும் வரும்..!அதனால நாம தயார் நிலையில இருக்கணும் என்று..! ஆனால் உண்மையில் அது ஆழ்மனதில் திடத்தோடு பதிவு செய்ய பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்..!  

அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..! தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும்  கொண்டாட சொல்கிறது.

விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போவதில்லை. 


சகோதரி.
ஆயிஷா பேகம்.

Friday 9 March 2012

The Prophet Muhammad's Last Sermon


Related Posts Plugin for WordPress, Blogger...