Wednesday 15 February 2012

இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா ...?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நம் சமூகத்தில் மார்க்கம் சொல்லிய படி,  நம் பெண்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் கூட்டம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புறக்கணிக்கும் ஒரு கூட்டம், இந்த நிலை ''எல்லா சமூகத்திலும் '' தான் இருக்கிறது , என்றாலும் , நம் மார்க்கம் நமக்கு அப்படித் தான் சொல்லி தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி..? 

பெண்களுக்கு என்று எந்த ஒரு உரிமையும் இல்லை அவர்கள் வெறும் போகப் பொருள்கள் தான் என்று இருந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கௌரவமான இடத்தைக் கொடுத்து அவளுக்கென கண்ணியத்தையும் ,உரிமையையும் மேன்மையையும் ,எல்லாவற்றிலும் சம அந்தஸ்தைத் தந்ததோடு மட்டும் அல்லாமல்,பெண் பிள்ளைகளை நல்லபடி வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு சுவனம் செல்லும் வாய்ப்பு உண்டு என சொன்ன மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்.

ஆனால், நடைமுறையில்.? இத்தனை வருடம் கழிந்தும் பெண்களுக்கான திருமணம் குறித்தான உரிமை சரியான முறையில் வழங்கப் பட்டிருக்கிறதா ..? என்றால்,இல்லை என்பதை வருத்ததுடன் தான் சொல்ல வேண்டியதாக  இருக்கிறது. நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் திருமணத்தை எத்தனை வீடுகளில் பெண்களின் மனம் அறிந்து திருமணம் செய்து கொடுக்கிறார்கள்..? 

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறுதியான ஒரு ஒப்பந்தம்.அது எல்லாவிதத்திலும் பொருத்தம் கொண்டதாக இருக்க வேண்டும்.நேசத்திலும்,நட்பிலும்,,இன்பத்திலும், துன்பத்திலும் நம் வாழ்க்கை முழுவதும் கைபிடித்து வரக்கூடிய துணை,தன் விருப்பம் போல் அமையக் கொடுத்து வைக்க வில்லை என்றால் அதை விட பெரிய நஷ்டம் ஒரு பெண்ணுக்கு இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

திருமணத்தை குரான் ஒரு உறுதியா வாக்குறுதி (மீசாக்)  என்கிறது. (4:21) . 

திருமணத்திற்கு  பெண்களின் சம்மதம் முக்கியம் என்றும் மணமகனை பெண்ணும் மணப்பெண்ணை பையனும் பார்த்து ஒருவருக்கொருவர் பிடித்து இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது நபி மொழி .ஆனால் நடைமுறையில் ? சில வீடுகளில் மணமகனின் புகைப்படமாவது காட்டப் படுகிறது,ஆனால், இன்னும் சில வீடுகளில் அதுவும் இல்லை. 

விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)

முதலில் நம் பெண்களுக்கே நம் மார்க்கம் தனக்காக என்ன சொல்லியிருக்கிறது என தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி ..? இன்னும் எங்க மதத்தில் மாப்பிள்ளையைப் மணப்பெண் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கு என்று சொல்பவர்களே அதிகம்.யார் வந்து இவர்களிடம் வந்து இதை சொன்னார்களோ தெரிய வில்லை? 

பொதுவாக பெண்கள் மணமகனைப் பார்க்காமலே திருமணம் நடந்தாலும், கணவன் என ஆனதும் தன்னுடையவன் என்ற உணர்வோடு எல்லாவற்றையும் தனக்கு பிடித்ததாக ஆக்கிக் கொள்வார்கள் .தன் கணவன் என்றும் ,தன் கணவனின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இயல்பிலேயே உண்டு.  அது பெண்களுக்கே அமைந்த இயற்கையான குணம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பிடிக்க வில்லை என வரும் போது அது மிகப் பெரும் இழப்பாக ஆகிறது. மணமகனைப் பிடிக்காமல்( முதலில் அப்படி வெளிப்படையாக சொல்லமுடியுமா என்பதும் கேள்வி தான் ) வரும் பெண்ணுக்கு அவ்வளவு எளிதாக மறுமணம் செய்ய முடியுமா..? இன்றைய காலகட்டத்தில்..?

 நம் பெண் நாம் சொல்லும் எல்லாவற்றிக்கும் தலை ஆட்டுவாள் என்பதை மனதில் வைத்து கொண்டு அவளுக்கும் விருப்பம் என்று ஒன்று இருக்கும் என்பதை மறந்து .தன் இஷ்டத்திற்கு தன் அந்தஸ்தையும், தன் போலி கௌரவத்தையும் மனதில் வைத்து கொண்டு  முடிவு எடுக்கும் பெற்றோர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தன் நிலையில் இருந்து அவர்கள் மாற வேண்டும்.

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி) நூல்: (புகாரி 5139, 6945, 6969)

நம் மார்க்கம் பற்றிய தெளிவும், மார்க்கம் சொல்லிய படி தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என பெண்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்காத வரை  இந் நிலை மாறப் போவதில்லை.ஆனால் அதை சொல்வதற்கு முதலில் அவளுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலும் அது பெண்ணுக்கு வழங்கப் படுவதில்லை.என்பது ஒரு கசப்பான உண்மை. 

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.பெண்களுக்கு சரியான முறையில் முடிவு எடுக்க தெரியாது ,அனுபவம் பத்தாது என்பதாகும் .பிடிக்காத கணவனைக் கட்டிக் கொண்டு ஐம்பது வருடம் வாழ்வதை விட மனதிற்கு பிடித்த கணவனைக் கட்டிக் கொண்டு பத்து வருடம் வாழ்ந்தாலேபோதும்என்று தான் ஒவ்வொரு பொண்ணும் நினைப்பாள். 

நல்ல மார்க்க அறிவு உள்ள பெண்களிடம் தான் தனக்கு என்ன தேவை என்பது பற்றியத்  தெளிவு இருக்கிறது.அதுவே சமயத்தில் அடுத்தவர்கள் பார்வையில் திமிர் பிடித்தவள் என சொல்லப் படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் தனக்கான உரிமையை ஒரு பெண் விட்டு கொடுக்க கூடாது.அனுமதிக்க பட்ட விதத்தில் நம் விருப்பத்தை வெளிப்படையாக சொல்லி பெற்றோர்களை ஏற்கச் செய்வது ஒவ்வொரு பெண்ணின் கட்டாயக் கடமை ஆகும். 

ஆனால், தனக்கு தகுதி இல்லாத மார்க்கத்திற்கு முரணான மாப்பிள்ளையை ஒரு பெண் தேர்வு செய்தாள், எனில் அதை முற்றிலுமாக புறக்கணிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் 

என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். 'என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை' என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ) 

ஆனால், அதே சமயத்தில் தானாக ஒரு பெண் தகுந்த பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்வதை மார்க்கம் அனுமதிக்க வில்லை.ஒரு சில பெண்கள் தானாகவே பிடித்தவர்களுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதை மார்க்கம் தடை செய்கிறது.இதுவும் பெண்ணின் பாதுகாப்பு கருதியே,மணமகன் ஒருவேளை மணமகளைப் பிரிய நேரிட்டால் யாரிடம் அந்தப் பெண் முறையிடுவாள்.?  ஒரு திருமணம் முழுமை பெற நான்கு முக்கிய அம்சங்கள் வேண்டும். 

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
 2. மணமக்களின் முழுமையான சம்மதம் (ஈஜாபு கபூல்)
 3. இரு நீதமுள்ள சாட்சிகள்
 4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
 என நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையிட்டார்கள்.
 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
 


இங்கு மஹரைப் பற்றி பேச வில்லை. அதை குறித்து தனி பதிவாகத் தான் போட வேண்டும். மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு ''மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டார் வைக்கும் ''நிபந்தனைகளும் கோரிக்கைகளும் '' யாரை ஏமாற்ற எனத் தெரிய வில்லை.அல்லாஹ் காப்பாற்றணும்.

தன் பெற்றோர் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன் பெற்றவர்களின் மனம் வேதனைப் படக் கூடாது  என்பதற்காக,திருமணம் செய்து கொண்டு மனதிற்குள் வேதனைப் பட்டுக் கொண்டு வாழும் சகோதரிகள் எத்தனையோ பேர்.

ஆனால் அவர்கள் அதை வெளியில் சொன்னாலும், நம் சமுதாயம் அவர்களை சும்மா விடுமா எனத் தெரிய வில்லை உடனேகண் ,காது,என இன்ன பிற உறுப்புகளை வைத்து பேசி அவர்களை ஒன்றும் பேச விடாமல் செய்து விடும். என்பதே உண்மை. இன்ஷா அல்லாஹ் இனி மேலாவது வரும் காலங்களில் இந்த நிலை மாற வேண்டும்.

இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)

சகோதரி.
ஆயிஷா பேகம்.

11 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு கட்டுரை.

    //இங்கு மஹரைப் பற்றி பேச வில்லை. அதை குறித்து தனி பதிவாகத் தான் போட வேண்டும். மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு ''மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டார் வைக்கும் ''நிபந்தனைகளும் கோரிக்கைகளும் '' யாரை ஏமாற்ற எனத் தெரிய வில்லை.அல்லாஹ் காப்பாற்றணும்.//

    இது புரியவில்லை. இன்ஷா அல்லாஹ் விளக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சலாம் சகோ ஆயிசா,

      /* இங்கு மஹரைப் பற்றி பேச வில்லை. அதை குறித்து தனி பதிவாகத் தான் போட வேண்டும். மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு ''மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டார் வைக்கும் ''நிபந்தனைகளும் கோரிக்கைகளும் '' யாரை ஏமாற்ற எனத் தெரிய வில்லை.அல்லாஹ் காப்பாற்றணும். */

      "மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு", இங்கு "மஹர் தருகிறேன் என சொல்லி விட்டு" என்று வர வேண்டுமோ?????

      சுண்டக்கா 500 ருபாய் அல்லது 24 கிராம் தங்கம் மகராக தந்துவிட்டு, அதைக் குடு இதைக் குடு என்று மாப்பிள்ளை வீட்டார் வாங்கும் வரதட்சணை பற்றி தானே இந்த வரி சகோ????

      Note : பின்னூட்ட பெட்டி எனக்கு வரவில்லை. எனவே இது தொடர்பான ஆசிக்கின் பின்னூட்டத்தில் பதிந்துள்ளேன். இதை தனியான பின்னூட்டமாக கொள்க.

      Delete
    3. Aashiq Ahamed-வ அழைக்கும் சலாம் வரஹ்..


      உங்க ஊரில் மஹர் குறித்த ஒப்பீடு எப்படி என்று தெரிய வில்லை சகோ,ஆனால் எங்கள் ஊர் பக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்,மதுரை மாவட்டம்,சிவகங்கை மாவட்டம்) இங்கு பொதுவாக மஹர் கேட்பது குறித்த எந்த வித தயக்கமும் இருப்பதில்லை.இன்றும் நடைமுறையில் மஹர் கேட்டு வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.இப்போது சமீப காலங்களில்,''அல்ஹம்துலில்லாஹ்'' சகோதரர்களில் மார்க்கம் பற்றிய விழிப்புணர்வு காரணமா திருமணத்திற்கு மஹர் கேட்கக்
      கூடாது என்ற பிள்ளைகளின் பேச்சையும் தட்ட முடியாமல் ,அதே சமயத்தில் மஹரையும் இழக்க விரும்பாமல் பணமா குடுக்க வேணாம்,ஆனா கூட ஒரு அஞ்சு பவுன் சேர்த்து போட்டுங்க என்று சொல்பவர்கள் இங்கு அதிகம் சகோ.நாம் என்ன தான் பேசினாலும் நடைமுறையில் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர் வழி காட்டணும்.

      Delete
    4. சிராஜ்-வ அழைக்கும் சலாம் வரஹ்..

      ஆமாம் சகோ நீங்கள் சொல்வது சரி தான்.கையில் இரண்டு லட்சத்தை வாங்கிக் கொண்டு பெண்ணுக்கு அம்பதாயிரம் செலவு செய்பவர்கள் இங்கு அதிகம்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    மாஷா அல்லாஹ். அருமையான, தெளிவான கட்டுரை. நம் சமுதாயத்திடம் உள்ள குறை பெரும்பாலும் மார்க்கத்தை சரிவர அறியாமல் இருப்பதால் தான்.

    //இன்னும் எங்க மதத்தில் மாப்பிள்ளையைப் மணப்பெண் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கு என்று சொல்பவர்களே அதிகம்.யார் வந்து இவர்களிடம் வந்து இதை சொன்னார்களோ தெரிய வில்லை? //

    இதை தான் மாற்று மதத்தவர்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும். திருமணத்திற்கு முன்னால் (பெண் பார்க்கும் படலத்தின் போதே) பெண்ணை ஆண் பார்க்க வேண்டும், ஆணை பெண் பார்க்க வேண்டும், சிலர் புகைப்படங்களில் கூட விக் வைத்து ஏமாற்றி விடுகின்றனர். நேரில் பார்த்தல் சிறந்தது. ஆனால் திருமணம் ஆகாமல் ஒரு ஆணும் பெண்ணும் தனியே சந்தித்தல் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வ அழைக்கும் சலாம் வரஹ்..

      நீங்கள் சொல்வது போல நடைமுறைக்கு வர வேண்டும்.இன்ஷா அல்லாஹ்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    அல்ஹம்துலில்லாஹ்...
    அருமையான பதிவு. அவசியமானதும் கூட ...
    தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வ அழைக்கும் சலாம் வரஹ்..

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ..

      Delete
  4. ஆமினா...

    சலாம் ஆயிசா

    அருமையா சொன்னீங்க...

    அதில் ஒரு வரி ரொம்பவே என்னை கவர்ந்துச்சு :-)
    //நல்ல மார்க்க அறிவு உள்ள பெண்களிடம் தான் தனக்கு என்ன தேவை என்பது பற்றியத் தெளிவு இருக்கிறது.அதுவே சமயத்தில் அடுத்தவர்கள் பார்வையில் திமிர் பிடித்தவள் என சொல்லப் படுகிறது. //

    சில விஷயங்களை மார்க்க அடிப்பைடையில் பின்பற்றினால் எல்லாருக்கும் வித்தியாசமா தெரிறோம். அதை ஏற்க முடியாதவர்கள் திமிர் பிடித்தவள், மெத்தப்படித்தவள்ன்னு சொல்லிடுறாங்க (இதையே ஒரு ஆண் செய்தால் கண்டுக்குறதில்லைங்குறது வேற விஷயம் :-). முதன் முதலாக தாலியை கழட்டி இருந்த போது வாங்கிய திட்டுக்கள் இதைதான் ஞாபகப்படுத்துது அவ்வ்வ்வ்

    அருமையான் ஆக்கம். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வ அழைக்கும் சலாம் வரஹ்..

      //சில விஷயங்களை மார்க்க அடிப்பைடையில் பின்பற்றினால் எல்லாருக்கும் வித்தியாசமா தெரிறோம். அதை ஏற்க முடியாதவர்கள் திமிர் பிடித்தவள், மெத்தப்படித்தவள்ன்னு சொல்லிடுறாங்க//

      உண்மை தான் சகோ பெரியவர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.நன்றாக வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியது இருக்கிறது. :-(

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ..

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...